பனிமலர்
பனிமலர்
Friday, December 27, 2024
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்முறை...
இதில் எல்லோரும் மறந்த இரு விடயங்கள்.அவைகளை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
1. காதல் என்பது ஒரு இயல்பான உணர்வு. காதலர்கள் தம் இணையுடன் முழு நம்பிக்கை ஏற்படாதவரை உடல் ரீதியாக காதல் வயப்படுவதை தடுக்க வேண்டும். அப்படியே அது நடந்தாலும் அதையே குற்றவுணர்வாக்கி அதை காதலர்களின் பெற்றோரிடம் சொல்வேன் என்று மிரட்டி தம் பாலியல் இச்சைக்கு இணங்க வைக்கும் சமூக விரோதிகளின் வலையில் வீழ்வதை விட பெற்றோர்களிடம் தாம் உடல் ரீதியாக காதல் வயப்பட்டு விட்டேன் என்று தெரிவித்து விடுவது எவ்வளவோ பரவாயில்லை. அதை வீட்டில் சொன்னால் எதிர்கொள்ளும் பெற்றோர்கள், காதலர்களுக்கு உடலின்பம் தேடுவது இயற்கையின் உந்துதல் தான் என்பதை புரிந்துக்கொண்டு தத்தம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்புவது இது போன்ற சமூக விரோதிகள் குழந்தைகளிடம் பாலியல் சுரண்டலுக்கு அழைப்பு விடுக்கும்போது எதிர்கொள்வது எளிதாக இருக்கும். அதை தவிர உடலில் இல்லை மானம், அது உணர்வு சார்ந்தது என்ற தெளிவை நம் சமூகத்திற்க்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. "பாபநாசம்" போன்ற திரைப்படங்களில் காட்டப்படும் பாலியல் சுரண்டல்கள் பெரும்பாலும் பெண்ணின் உடலை வைத்து "மானம் போய்விட்டதாக" பெண் கருதும் எண்ண நிலைக்கு இழுத்து செல்கின்றனர். வெளி நாடுகளில் சூரிய குளியல் கடற்கரைகளில் பெண்கள் தாம் பிறந்த மேனியுடன் இருப்பதை அந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இங்கு பெண்ணின் உடலை அவளின் அனுமதி இல்லாமல் படம் பிடித்தால் கூட அதற்கு அப்பெண்ணின் மானம் போய்விட்டதாக கருத அவளே தலைப்படுகிறாள்.
2. இந்த விடயத்தில் பலிகடா ஆக்கப்பட்ட அப்பெண்ணின் காதலன், ஒரு ஆண்மை உள்ளவனாக அப்பெண்ணை விருப்பமற்ற உறவுக்கு உட்படுத்தப்படும்போது கொதித்து எழுந்து போராடியிருக்க வேண்டும். இதுவே மாநிலக்கல்லூரி அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தால் போராடியிருப்பான். நன்றாக படிக்க வைக்கிறேன் என்று நம் குழந்தைகளின் வீரத்தை அறவே அழித்து விடுகிறோம். வீரமற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment